
உலக புற்று நோய் தினம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 4-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக இது பார்க்கப்படுகிறது.
செல்வந்த நாடுகளின் நோய் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டு வந்த புற்றுநோய் இன்று உலகில் அனைத்து நாடுகளையும் மிக மோசமாக ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது. 2012-ல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி உலகெங்கும் 1 கோடியே 41 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 82 லட்சம் பேர் புற்று நோயால் மரணமடைகின்றனர்.
விழிப்புணர்வு
உலக புற்று நோய் தினம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 4-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக இது பார்க்கப்படுகிறது. நோய் பற்றிய முழு தகவல்களையும் தருவது, புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவை இத்தினத்தின் நோக்கமாகும். இதனை உலக புற்று நோய் கட்டுப்படுத்துதல் கூட்டமைப்பு முன்னின்று நடத்துகிறது. இந்த புற்று நோய் தினமானது 1933-ம் ஆண்டு ஜெனிவா நகரில் உலக புற்று நோய் மையத்தின் மூலமாக ஏற்படுத்தப்பட்டது.
கட்டுப்பாடற்று செல்கள் பிரிவது
புற்றுநோய் என்பது கட்டுப்பாடற்று செல்கள் பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்த செல்கள் பிரிந்து பரவி ஏனைய தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுசெல்கள் ரத்தத்தின் வழியாக பரவுகின்றன. புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும். எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
மரபுகளில் ஏற்படும் மாற்றங்கள்
செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபுகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது. புகைப்பழக்கம், சில உணவுகள், சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ள பணியில் ஈடுபடுதல், எச்.ஐ.வி நோய் தொற்று போன்ற காரணங்களாலும், பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கும் இந்நோய் வரலாம்.
அறிகுறிகள்
உடலில் உள்ள உறுப்புகளில் ஒருவித தடிப்பு மற்றும் வீக்கம், உடலில் உள்ள மச்சத்தில் ஏற்படும் மாற்றங்கள், ஆறாத புண்கள், தொடர் இருமல் மற்றும் கரகரப்பான கம்மிய குரல், தொடர்ந்து அஜீரணம் மற்றும் உணவை விழுங்குவதில் பிரச்சினை ஏற்படுதல், உடல் எடையில் மாற்றம், இயல்புக்கு மாறான ரத்தப்போக்கு, ரத்தக்கசிவு மற்றும் நோயின் தன்மைக்கேற்ப இதன் அறிகுறிகள் மாற்றமடையலாம்.
தடுக்கப்படக் கூடியவை
சரியான விழிப்புணர்வு மற்றும் தெளிவான திட்டமிடல் இருந்தால் புற்றுநோயிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். புற்றுநோய்களில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டவை சாதாரண நடவடிக்கைகள் மூலம் தடுக்கப்படக் கூடியவையாகவே உள்ளன. புகைபிடிப்பதை தவிர்த்தல், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, மதுப்பழக்கம், போதைப் பொருட்களை தவிர்த்தல் போன்ற அடிப்படை செயல்கள் மூலம் இந்நோய் ஏற்படுவதை தடுக்கலாம்.
மீண்டும் பழைய தோற்றத்தைப் பெறலாம்
தற்போது தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நவீன சிகிச்சை முறைகள் உள்ளதால் நோயாளிகளை முன்பை விட அதிகமாக குணப்படுத்த முடியுமென டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் சிகிச்சையின்போது ஏற்படக்கூடிய உருவ மாற்றம், தலைமுடி கொட்டுதல், உடல் இளைத்தல் ஆகிய அனைத்தும் தற்காலிகமானவையாகும். குறுகிய காலத்தில் அவர் மீண்டும் பழைய தோற்றத்தை பெற முடியும். எனவே சமூகத்திற்கு பயந்து சிகிச்சைகள் ஆரம்பிப்பதை காலம் தாழ்த்தவோ, தவிர்ப்பதோ கூடாது என புற்றுநோய் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
மார்பக புற்றுநோய்
பெண்களுக்கு மார்பக புற்றுநோயும், கர்ப்பப்பை புற்றுநோயுமே பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. 2030-ம் ஆண்டளவில் வருடத்திற்கு 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் கர்ப்பப்பை புற்றுநோயினால் உயிரிழக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. தற்போது புற்றுநோயை கண்டறிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன், பெட் ஸ்கேன், எலும்பு ஸ்கேன், மொமோகிராம், சி.டி. ஸ்கேன் போன்றவை உதவியாக உள்ளன. புற்று நோய் ஒரு உறுப்பை பாதித்துவிட்டால், அந்த உறுப்பை அகற்றாமல் நோயை குணப்படுத்துவதே நவீன மருத்துவத்தின் இலக்காகும்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரில் பாதிக்கும் மேற்பட்டோர் நோய் முற்றிய நிலையிலேயே தமக்கு புற்றுநோய் இருப்பதை தெரிந்து கொள்கின்றனர். எனவே இதில் மக்கள் கவனம் செலுத்தி தங்களுக்கு ஏற்படும் நோயில் வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டால் காலதாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனையை நாடவேண்டும்.
உலகப் பிரச்சினை
புற்றுநோய் என்பது சுகாதாரத்துடன் மட்டும் தொடர்புடையது அல்ல. ஒரு சமூகத்தின், ஒரு நாட்டின் அபிவிருத்தியில், மனித உரிமைகளில் என அனைத்திலும் தாக்கம் செலுத்துகிறது. அது உலக பிரச்சினை. இது அனைத்து வயதினரையும் அனைத்து, சமூக பிரிவுகளையும், அனைத்து நாடுகளையும் தாக்குகிறது.
புற்றுநோயை மரண தண்டனையாக சிலர் நினைக்கின்றனர். ஆனால் அதனை முடிந்தளவு குணப்படுத்த முடியும். மூன்றாம் கட்டத்தை கடந்த பின்னர் கூட குணப்படுத்த முடியும் என்கிறது நவீன மருத்துவ சிகிச்சைகள். போதுமான அறிவையும், விழிப்புணர்வையும் வளர்த்துக்கொண்டால் உலகில் புற்றுநோயை 30% வீதம் தடுத்துவிட முடியும் என்பது தான் உண்மை.
ஆரோக்கியமாக வாழ பழகுவோம்
இவற்றை கருத்தில் கொண்டு புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாக சந்தேகம் எழுந்தால், எவ்வித அச்சமுமின்றி டாக்டர்களை நாடி சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். மேலும் ஆரோக்கியமாக வாழ்வதையும் வாழ்நாள் பழக்கமாக்கி கொள்ள வேண்டும்.