
குளத்தில் மூழ்கி காணாமல் போன இளம் குடும்பஸ்தர்
மட்டக்களப்பு - உறுகாமம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிமுஹம்மது நப்ராத் (வயது 24) என்ற இளம் குடும்பஸ்தர் உறுகாமம் குளத்தில் மூழ்கிய நிலையில் காணாமல் போயுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று நண்பகல் மீன் பிடிக்கச் சென்றவர் காணாமல் போயுள்ள தகவல் தெரிந்ததும் உறவினர்களும் மீனவர்களும் தேடுதலில் ஈடுபட்டனர்.
எனினும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை அவர் கண்டு பிடிக்கப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து கடற்படைச் சுழியோடிகள் வரவழைக்கப்பட்டு தேடுதல் இடம்பெற்றுவருவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.
உறுகாமம் குளம் தற்போது நீர் நிரம்பியுள்ளதாலும் அந்தக் குளத்தின் சுற்றளவு சுமார் 12 மைல்கள் உள்ளதாலும் குளத்தில் நீரோட்டம் நிலவுவதாலும் தேடுதல் பணிகள் சிரமம் அடைந்திருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.