மிகவும் ஆபத்தான நிலையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்! அநுராதபுர வைத்தியசாலை வைத்தியர்களின் நெகிழ்ச்சியான தருணம்

மிகவும் ஆபத்தான நிலையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்! அநுராதபுர வைத்தியசாலை வைத்தியர்களின் நெகிழ்ச்சியான தருணம்

வவுனியாவிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 4 இல் கல்வி கற்றுவரும் சிறுவன் ஒருவன் 3 இஞ்சி நீளமான ஊசி ஒன்றினை தவறுதலாக விழுங்கியுள்ளார். அவ்வாறு விழுங்கப்பட்ட ஊசி இதயம், நுரையீரல் போன்ற பகுதிகளை துளைக்கும் நிலையில் இருந்ததாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அதனை அவதானித்த வைத்தியர்கள் உடனடியாக 25 நிமிட சிகிச்சை மேற்கொண்ட பின்னர் ஊசி வெற்றிகரமாக வெளியே அகற்றப்பட்ட சம்பவம் அனுராதபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது .

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,

கடந்த சனிக்கிழமை மாலை வவுனியாவில் தனது வீட்டில் சிறுவன் ஒருவன் 3 இஞ்சி நீளமான ஊசி ஒன்றினை தனது வாயில் வைத்து விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வாய் வழியே அவ் ஊசி சென்றுவிட்டது.

இதையடுத்து குறித்த சிறுவனை வவுனியா வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டு கதிரியக்கப்படம் எடுக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மாலை மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் அனுப்பி வைக்கப்பட்டது .

அனுராதபுரம் வைத்தியர்கள் மதிநுட்பத்தினுடன் விரைந்து செயலாற்றிய செயற்பாடு காரணமாக 25 நிமிட சிகிச்சையின் பின்னர் வாய் வழியே சென்ற ஊசி வெளியேற்றப்பட்டுள்ளது. இவ் வெற்றிகரமான நடவடிக்கையினால் குறித்த சிறுவன் ஆபத்தான நிலையிலிருந்து தற்போது மீண்டு விட்டதாகசும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஊசி வாய்ப்பகுதி களச்சுவரில் குற்றிச் சென்று நெஞ்சடைக்கூட்டு பகுதிகளிலுள்ள இதயம் மற்றும் நுரையீரல் பகுதிகளை துளைக்க நேரிடும் என்ற அறிகுறிகள் கதிரியக்க படத்தில் தெரிய வந்துள்ளது . இதையடுத்து அனுராதபுரம் வைத்தியர்களின் துரித செயற்பாடு காரணமாக சிறுவனினால் விழுங்கப்பட்ட நீளமான ஊசி வெளியே எடுக்கப்பட்டு சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் வைத்தியசாலையிலுள்ள பலரையும் வியக்க வைத்துள்ளதுடன் அனுராதபுரம் வைத்தியசாலையின் வைத்தியர்கள் மேற்கொண்ட மதிநுட்ப செயற்பாட்டினை பலரும் பாராட்டியும் வருகின்றனர்.