அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கான விசேட செய்தி...!

அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கான விசேட செய்தி...!

 

மேல் மாகாணம் மற்றும் நாட்டின் ஏனைய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களைத் தவிர ஏனைய இடங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் கற்றல் செயற்பாடுகளுக்காக திறக்கப்படுகின்றன.

கொவிட் பரவலையும் கட்டுப்படுத்திக் கொண்டு, மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், புதிய வழமையின் கீழ் சுகாதார அறிவுறுத்தல்களுடன் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்படாத பிரதேசங்களில் எதிர்வரும் 25ம் திகதி முதல் 11ம் தரத்துக்கான கல்வி செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் பாடசாலைகளுக்கான முதலாம் தர மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் செயற்பாடுகளும் ஆரம்பமாகவுள்ளன.

உரிய திட்டங்களின் அடிப்படையிலேயே இன்றைய தினம் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சுகாதார அறிவுறுத்தல்கள் உரிய வகையில் பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பான கட்டம் கட்டமாக கண்காணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள 32 பாடசாலைகளைத் தவிர ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் இன்றைய தினம் திறக்கப்படவுள்ளன.

அதேநேரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 25 பாடசாலைகள் தவிர்ந்த, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏனைய சகல பாடசாலைகளும் இன்றைய தினம் திறக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் க. கருணாகரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதிவரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சினால் வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும்போது முகக்கவசங்களை அணிதல் கட்டாயமாக்கப்படல் மற்றும் பாடசாலைக்கு உள்ளும், பாடசாலையிலிருந்து வீட்டுக்கு செல்லும்வரையிலும் முகக்கவசம் அணிதல் கட்டாயமாகும் என பிள்ளைகளை அறியச்செய்தல் வேண்டும் என அந்த வழிகாட்டல் கோவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்குள் நுழையும்போது அனைத்து மாணவர்களதும், பணியாளர்களதும் உடல் வெப்பநிலையைச் பரிசோதித்து இயல்பான வெப்பநிலை காணப்படின் பாடசாலைக்குள் அனுமதித்தல் வேண்டும்.

ஏதேனும் சந்தர்ப்பத்தில் உடல் வெப்பநிலை அதிகமான மாணவர்கள் அல்லது பணியாளர் கண்டுபிடிக்கப்பட்டால் ஓய்வெடுப்பதற்காக நோயாளர் அறைக்கு அனுப்பி மீண்டும் உடல் வெப்பநிலையைச் சோதித்த பின்னர் சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொதுச்சுகாதாரப் பரிசோதகருக்கு தெரியப்படுத்தி அறிவுரையைப் பெறுவதுடன் பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மாணவர்கள் பாடசாலைக்குள் நுழையும்போது கைகளைக் கழுவுதலைக் கட்டாயமாக்கிப் பாதணிகளைக் கிருமியழிப்புக்கு உட்படுத்துதல் மற்றும் அவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என அன்றாடம் கண்காணிக்க வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை இடைவேளை நேரத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் கிடைக்காத வகையில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு அமைவாக அதிபரின் விருப்பின் அடிப்படையில் மற்றும் பாடசாலைக்குப் பொருந்தும் வகையில் தயார் செய்து கொள்ளமுடியும்.

இதேவேளை, தங்களது பிள்ளைகளுக்கு இருமல், சளி அல்லது காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் அவர்களை பாடசாலைக்கு அனுப்பாதிருக்க பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீட்டில் வேறு எவரேனும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் தங்கள் பிள்ளைகளை, பாடசாலைக்கு அனுப்பாதிருக்க வேண்டும் என கல்வி அமைச்சு பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.



No description available.

No description available.