கல்வி செயற்பாடுகளுக்காக நாளை முதல் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பம்..!!

கல்வி செயற்பாடுகளுக்காக நாளை முதல் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பம்..!!

மேல் மாகாணம் மற்றும் நாட்டின் ஏனைய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களைத் தவிர மற்றைய இடங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் கல்வி செயற்பாடுகளுக்காக திறக்கப்படுகின்றன.

கொவிட் பரவலையும் கட்டுப்படுத்திக் கொண்டு, மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், புதிய வழமையின் கீழ் சுகாதார அறிவுறுத்தல்களுடன் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்படாத பிரதேசங்களில் எதிர்வரும் 25ம் திகதி முதல் 11ம் தரத்துக்கான கல்வி செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் பாடசாலைகளுக்கான முதலாம் தர மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் செயற்பாடுகளும் ஆரம்பமாகவுள்ளன.

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, மக்கள் இந்த காலப்பகுதியில் சரியான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி நடக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டிய நிலைமை ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எவ்வாறாயினும் உரிய திட்டங்களின் அடிப்படையிலேயே நாளையதினம் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சுகாதார அறிவுறுத்தல்கள் உரிய வகையில் பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பான கட்டம் கட்டமாக கண்காணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள 32 பாடசாலைகளைத் தவிர ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் நாளை திறக்கப்படவுள்ளன.

அதேநேரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 25 பாடசாலைகள் தவிர்ந்த, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏனைய சகல பாடசாலைகளும் நாளைய தினம் திறக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் க. கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட அரசாங்க காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற மாவட்ட கொரோனா செயணிக் கூட்டத்தில் எடுக்கப்படட தீர்மானங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு அறிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதிவரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்