
நேற்று கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்
நேற்றைய தினம் (06) முதல் இன்று (07) காலை வரையான காலப் பகுதிக்குள் நாட்டில் புதிதாக 522 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் வௌிநாட்டிலிருந்து நாடு திரும்பியவராவார்.
இன்று காலை வரையான 24 மணி நேரத்திற்குள் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 206 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 97 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 24 நபர்களும் யாழ் மாவட்டத்தில் மூவரும் திருகோணமலை மாவட்டத்தில் ஐவரும் புதிதாக தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களாவர்.
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் 32 பேர், கிருலப்பனை பகுதியில் 06 நபர்கள், நாரஹேன்பிட்ட பிரதேசத்தில் 27 பேர், பொரளை பகுதியில் 36 பேர், கிரேண்ட்பாஸ் பகுதியில் மூவர், மட்டக்குளி பகுதியில் 15 பேர் உள்ளடங்கலாக கொழும்பு மாவட்டத்தில் 206 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடவத்தை பகுதியில் ஐவரும் நீர்கொழும்பு பகுதியில் ஒருவரும் வத்தளை பிரதேசத்தில் நால்வரும் கடந்த 24 மணி நேரத்திற்குள் கம்பஹா மாவட்டத்தில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுள் அடங்குகின்றனர்.
திருகோணமலை பகுதியில் நால்வரும் கிண்ணியாவில் ஒருவரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பகுதியில் 08 பேரும் அக்கரைப்பற்று பகுதியில் ஒருவரும் கல்முனையில் 06 பேரும் மஹாஓயாவில் ஒருவரும் சம்மாந்துறை பகுதியில் மூவரும் சாய்ந்தமருது பிரதேசத்தில் ஐவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களாவர்.
யாழ் மாவட்டத்தின் கோப்பாய் பகுதியை சேர்ந்த மூவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று (07) காலை வரையில் நாட்டில் 46,248 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 39,023 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் தெஹிவளை மற்றும் அலவ்வ ஆகிய பகுதிகளை சேர்ந்த இருவர் கொரோனா தொற்றினால் நேற்று (06) உயிரிழந்தனர்.
குறித்த இரு கொரோனா மரணங்கள் அடங்கலாக நாட்டில் இதுவரை 219 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
நாட்டில் நேற்று 12,456 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், கட்டார் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளிலிருந்து 231 பேர் இன்று தாயகம் திரும்பியுள்ளனர்.