ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த நபருக்கு மரண தண்டனை

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த நபருக்கு மரண தண்டனை

14.76 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தன்வசம் வைத்து விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள 43 வயதான நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக்கக கணேபொல இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

கொழும்பு - மருதனை பிரதேசத்தை சேர்ந்த துவான் நிஸாம் சஹாப்தீன் சாமத் என்ற நபருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி மருதானை பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதலின் போது 14.76 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இந்த நபர் கைது செய்யப்பட்டார்.

இதன் பின்னர் அவருக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் இன்று தீர்ப்பை வழங்கிய நீதிபதி தம்மிக்க கணேபொல, குற்றவாளிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு எவ்வித சந்தேகமும் இன்றி ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதனால், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.