கொழும்பில் பரிசோதனைக்கு ஒத்துழைக்காத பொது மக்கள்! கவலையில் சுகாதாரத்துறையினர்
பொதுமக்கள் பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள தயங்குவதே தற்போது சுகாதார அதிகாரிகளுக்கு பாரிய பிரச்சினையாகியிருப்பதாக சுகாதாரத் துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
பிசிஆர் பரிசோதனைகளை நடத்துவதற்காக தற்போது கொழும்பில் ஆறு அணிகள் செயற்படுகின்றன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கொழும்பின் குறைந்த மற்றும் மிகக் குறைந்த ஆபத்து நிறைந்த பகுதிகளிலும் சுகாதாரப் பணியாளர்கள் விரைவான என்டிஜென் சோதனைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பில் தொடர்ந்தும் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதால் இதுவரை கண்டறியப்பட்டாத புதிய தொற்றுக்களையும் கண்டறிய அதிகாரிகள் முயற்சிப்பார்கள் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏறக்குறைய அனைத்து அதி ஆபத்து பகுதிகளும் இப்போது சோதனை செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து தற்போது குறைந்த இடர் பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் கவனத்தை மாற்றியுள்ளனர்.
இதன்படி கொழும்பில் நாளொன்றுக்கு 500 என்டிஜென் சோதனைகள் நடத்தப்படுகின்றன. நடமாடும் சேவையில் ஈடுபட்டு வரும் சுகாதார அதிகாரிகள், குறைந்த ஆபத்துள்ள பகுதிகளுக்குச் செல்லும்போது, ஒரு குடும்பத்திற்கு ஒரு உறுப்பினரை என்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்துகின்றனர்.
இதன்போது அவருக்கு தொற்று கண்டறியப்பட்டால் அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவரும் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுகிறார்கள். சோதனைகளை நடத்துவதற்காக தற்போது கொழும்பில் ஆறு பி.சி.ஆர் அணிகள் செயற்படுகின்றன.
எனினும் பொதுமக்கள் தம்மை சோதனை செய்துகொள்ள தயங்குவதே தற்போது சுகாதார அதிகாரிகளுக்கு பாரிய பிரச்சினையாகியிருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.