புதியவகை வைரஸிலிருந்து இலங்கை தப்புமா? விடுக்கப்பட்ட எச்சரிக்கை

புதியவகை வைரஸிலிருந்து இலங்கை தப்புமா? விடுக்கப்பட்ட எச்சரிக்கை

புதிய வகை வைரஸிலிருந்து இலங்கை தப்புவதற்கான வாய்ப்பு குறைவென எச்சரிக்கை விடுத்துள்ளது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே நேற்றையதினம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளதாவது

ஐரோப்பிய நாடுகளில் மாத்திரமின்றி ஆபிரிக்கா , மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகள் சிலவற்றிலும் புதிய வகை வைரஸ் பெருமளவில் இனங்காணப்பட்டுள்ளது.

எனவே இது இலங்கையில் பரவலாமலிருக்க இலங்கையில் மேலும் கடுமையான சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

எவ்வாறான புதிய வகை வைரஸ் தோன்றினாலும் அடிப்படை சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் அவற்றிலிருந்தும் எம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

புதிய வகை வைரஸ் இளைஞர்கள் மத்தியிலேயே தீவிரமாகப் பரவலடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அபாயம் அதிகமாகும்.

இலங்கையில், தொற்றுக்குள்ளானோரில் 80 சதவீதமானோர் குணமடைந்துள்ளனர். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது எமது நாட்டில் மரணங்களின் எண்ணிக்கை குறைவாகும். எனினும் கொழும்பு மாவட்டத்தில் வைரஸ் பரவல் கொழும்பு மாநகரசபையிலேயே மையம் கொண்டிருந்தது.

எனினும், தற்போது அவிசாவளை போன்ற பகுதிகளிலும் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதிலிருந்து கொழும்பு மாநகர சபையில் காணப்பட்ட அபாயம் ஏனைய பகுதிகளுக்கு பரவியுள்ளமை தெளிவாகியுள்ளது.

எனவே, ஏனைய பகுதிகள் தொடர்பில் எப்போதும் அவதானமாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

எவ்வாறிருப்பினும் இவ்வாறான நிலைமைகளிலிருந்து நாட்டை மீட்பதற்கு மக்களின் முழுமையான ஒத்துழைப்பே அத்தியாவசியமானதாகும் என்றார்.