கொரோனாவால் உயிரிழப்போரின் இறுதிச் சடங்குகள் குறித்த அறிக்கை விரைவில்
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை விரைவில் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிபுணர் குழு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் தொடர்பான விஞ்ஞான ரீதியிலான காரணங்களைப் பரிசீலித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வர்த்தமானி செய்யப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களின்படி, கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் உடல்கள் 24 மணிநேரத்துக்குள் தகனம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த மாதம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, கொரோனா தொற்றால் உயிரிழந்த அனைவரையும் தகனம் செய்யும் முடிவை நிபுணர் குழு மதிப்பாய்வு செய்யும் எனக் கூறினார்.
மேலும் தகனம் செய்ய அனுமதிக்கும் முடிவு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி குறிப்பிட்டிருந்தார்.