
சுற்றுலாப் பயணிகளுக்கான ஆலோசனை கோவை வௌியீடு
இந்த வாரத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த சுற்றுலா திட்டத்தின் கீழ், வௌிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்காக சுகாதார அமைச்சினால் ஆலோசனைக் கோவை ஒன்று வௌியிடப்ட்டுள்ளது.
இதன்பிரகாரம், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்காக COVID – 19 காப்பீடு பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல் முற்பதிவின் போதோ அல்லது பயணச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளும் போதோ பொருத்தமான காப்பீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
விமான நிலையங்களுக்கு புறப்படுவதற்கு 96 மணித்தியாலங்களுக்கு முன்னர், இந் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கூடங்களில் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்து 2 வார கால பகுதிக்குள் 3 PCR பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதுடன் அவையனைத்தும் ஒரே மருத்துவ கூடத்தினால் நடத்தப்பட்டிருக்க வேண்டுமெனவும் சுகாதார அமைச்சின் ஆலோசனைக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஹோட்டல்களில் மாத்திரம் தங்குவதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
முதல் 02 வாரங்களில் சுதந்திரமாக நடமாட தடை விதிக்கப்படும் அதேவேளை, ஹோட்டலில் இருந்து வௌியில் செல்லவும் ஒரு வாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.