
கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக ‘காட்டேரி’ படத்தின் ரிலீஸ் தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காட்டேரி’. இப்படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். காமெடி கலந்த திகில், திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை டீகே இயக்கி உள்ளார். இப்படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையன்று (டிச.25) வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதால் படத்தின் ரிலீஸ் தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதாக வெளியாகும் தகவல்களின் அடிப்படையில், எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.
இப்பொழுது நிலவும் குழப்பமான மற்றும் நிலையில்லாத் தன்மையை கருத்தில் கொண்டும், இத்திரைப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் பல்வேறு கடின உழைப்பு சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலும் எங்கள் தயாரிப்பில் டிசம்பர் 25-ஆம் தேதி வெளிவர இருக்கும் "காட்டேரி" திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த கொரோனாவின் தாக்கம் குறைந்தவுடன் காட்டேரி திரைப்படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.