அனைத்து துறைகளிலும் நாட்டை தன்னிறைவடையச் செய்தல் வேண்டும்
எமது நாடு குறித்த எதிர்பார்ப்புகளை கொண்டிருக்க வேண்டுமாயின் அனைத்து துறைகளிலும் நாட்டை தன்னிறைவடையச் செய்யும் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (23) தெரிவித்தார்.
இரத்மலானையில் அமைந்துள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் புதிய ஹோர்மோன் மாத்திரை உற்பத்தி ஆலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
புதிய நாட்டிற்கு புதிய ஒளடதம் எனும் எண்ணக்கருவிற்கமைய அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் புதிதாக உற்பத்தி ஆரம்பிக்கப்பட்ட ஃப்ளுகோஷைலின் ஒளடத மாத்திரையை பிரதமரிடம் வழங்கி, அறிமுகப்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை குறைத்தல் மற்றும் நிறுத்துவதுடன் நம் நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்தும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியுடன் காணப்படுவதாக இதன்போது பிரதமர் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,
விசேடமாக 2012ஆம் ஆண்டிலேயே இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு எமக்கு அனுமதி வழங்கப்பட்டது. அன்று 4470 மில்லியன் இதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அதனால் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் திறன் இரட்டிப்பாகியுள்ளது. அதனால் இந்நிறுவனத்தின் முக்கியத்துவம் குறித்து நான் புதிதாக எதையும் கூற தேவையில்லை.
எனினும், நாம் 70 வீதமான ஒளடதங்களை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றோம். நாம் அவ்வாறு இறக்குமதி செய்கின்றோமாயின், அந்த ஒளடதங்களை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான பொறுப்பு எமக்குள்ளது. அதனை செய்வதற்கான ஞானம் மற்றும் அறிவு மிகுந்தவர்கள் எம்மிடம் உள்ளனர்.
அதனால், அவ்வாறான ஞானம் மற்றும் புத்திசாலித்தனத்தை கொண்டு சேவையை பெற்றுக் கொள்ள வேண்டும் என நம்புகின்றோம். இந்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்தும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்றும், வெளிநாட்டு இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அதனால் அதற்கான வேலைத்திட்டங்களை நாம் அனைத்து துறைகளிலும் செயற்படுத்த வேண்டும்.
ஒளடத உற்பத்தி வலயமொன்றை அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கவுள்ளோம். நான் அது தொடர்பில் தற்போது செயலாளரிடம் வினவினேன். அது வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு மாத்திரம் எனக் கூறினார்.
அம்பாந்தோட்டையிலும் நாம் ஒளடத உற்பத்தி வலயமொன்றை நிறுவுகின்றோமாயின், அது தொடர்பில் முதற்படிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதே மிகவும் சிறப்பாக அமையும் நான் நம்புகிறேன். முதற்படி எடுக்காவிடின், எந்தவொரு வலயமொன்றையும் ஆரம்பிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை எனக் கூறினார்.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி,
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், நிதி அமைச்சராக இந்நிறுவனத்தை பாரிய விரிவாக்கத்திற்கு உட்படுத்தினார். அதன் பலன்களை இன்று நாம் அனுபவித்து வருகின்றோம்.
அதேபோன்று எமது நாட்டிற்கு தேவையானவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆர்வம் செலுத்திவருகிறார். அதற்கு பிரதமரின் தலைமையில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன,
இவ்விடயம் தொடர்பில் ஏற்பட்ட தடைகள் பலவாகும். புதிய செயலொன்றை செய்வது எவ்வளவு கடினமானது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதேபோன்று இந்த ஃப்ளுகோஷைலின் எனும் ஒளடதத்தை நாம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளோம். அரச துறையின் சுமார் 550 மில்லியன் ரூபாய்கள் மற்றும் தனியார் துறையின் சுமார் 450 மில்லியன் ரூபாய்கள் செலவில் அது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை நாம் திறந்து வைப்பதாக அவர்கள் கூறுகின்றனர். அதன் உண்மையான நிலை என்னவென்றால், 2015ஆம் ஆண்டிற்கு முன்னர் பிரதமரினால் ஆரம்பிக்கப்பட்டவற்றையே அவர்களால் நிறைவு செய்ய முடியவில்லை.
உதாரணமாக கடந்த காலத்தில் 4 அல்லது 5 ஒளடத வகைகளே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. எனினும் கடந்த சில மாதங்களில் மாதத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் ஒடளத வகைகளை நாம் உற்பத்தி செய்தோம். பிரதமர் அவர்களே, அதன் மூலம் சுமார் 1.5 பில்லியன் ரூபாய்களை சேமிப்பதற்கு எமக்கு வாய்ப்பு கிடைத்தது. நாம் இந்த வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வோம். அதற்காக ஹொரண மில்லேவ பிரதேசத்தில் இதேபோன்ற இதைவிட வசதிகள் மிகுந்த புதிய ஒளடத உற்பத்தி ஆலையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்.
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் உத்பல இந்திரவங்ஷ,
இன்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு விசேடமான நாளாகும். மூன்று விடயங்களை கவனத்திற் கொண்டு நாம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம். முதலாவது விடயம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அப்போதைய ஜனாதிபதியாக சேவையாற்றிய காலப்பகுதியில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு செய்த சேவையை பாராட்டி அதற்கு நன்றி தெரிவிப்பதற்கும், இரண்டாவது நாம் புதிதாக ஹோர்மோன் மாத்திரைகள் மற்றும் கப்சியூள் உற்பத்தி ஆலையை திறத்தல், மூன்றாவது விடயம் ஃப்ளுகோஷைலின். நான் வரலாறு குறித்து ஞாபகப்படுத்தினால் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் 1987ஆம் ஆண்டு ஜப்பானின் நன்கொடையில் ஆரம்பிக்கப்பட்டதாகும். 550 மில்லியன் மாத்திரைகள் என்ற திறனுடன் இந்த உற்பத்தி ஆலை ஆரம்பிக்கப்பட்டது.
2012ஆம் ஆண்டு நிதி அமைச்சராக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2.4 பில்லியன் ரூபாய்களை இந்த உற்பத்தி ஆலைக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்கிறார். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கருவிகள் இந்நிறுவனத்திற்கு கிடைக்கின்றன. 2012ஆம் ஆண்டு முதல் 2020 வரை இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு, மாத்திரைகளின் திறன் 3300 மில்லியன் வரை அதிகரித்துள்ளது. நிதியமைச்சர் என்ற ரீதியில் இத்திட்டத்திற்கு அன்று நிதி ஒதுக்கப்பட்டிருக்காவிடின் இந்த கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் வைத்தியசாலை அமைப்புகள் பாரிய ஒளடத பற்றக்குறைக்கு முகங்கொடுக்க நேரிட்டிருக்கும். இந்தியா, சீனா ஆகிய நாடுகள் விமானநிலையங்கள், துறைமுகங்களை மூடிய போதிலும், நாம் ஒளடத உற்பத்தியை மேற்கொண்டமையால் அரச வைத்தியசாலைகளுக்கு தட்டுப்பாடின்றி ஒளடதங்களை பெற்றுக் கொள்ளக் கூடியதாயிற்று.
இத்தொழிற்சாலையின் உச்ச திறன் 3300 மில்லியனாகும். நாம் அந்த இலக்கை 2023ஆம் ஆண்டே அடைவதற்கு எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் பிரதமரின் ஒதுக்கீடு காரணமாக எமக்கு 2021ஆம் ஆண்டிலேயே அந்த இலக்கை எட்ட முடிந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.