மட்டக்களப்பு தாதி ஒருவருக்கு இரவு வேளை இடம்பெற்ற விபரீதம்!
மட்டக்களப்பு பகுதியில் தாதியர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பறவைகளை சுடும் துப்பாக்கி மூலம் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மட்டக்களப்பு கண்ணகி அம்மன் கோவில் 3 ஆம் குறுக்கு வீதியில் வசிக்கும் தாதியர் ஒருவர் மீதே நேற்று இரவு துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டில் பூம்புகார், கண்ணகியம்மன் வீதியை சேர்ந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தலைமை தாதிய உத்தியோகத்தராக கடமையாற்றும் 55 வயதுடைய நடராஜா ராதா என்பவரே படுகாயமடைந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் எயார்கண் துப்பாகியைக் கொண்டு நேற்று இரவு 9.30 மணியளவில் வீட்டின் மேல்மாடியில் இருந்து மரத்தில் இருந்த வௌவால் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதன்போது சத்தம் கேட்டு எதிர்வீட்டில் இருந்து வெளியில் வந்த தாதி மீது குறி தவறி குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து படுகாயமடைந்த தாதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபரை கைது செய்துள்ள பொலிஸார், துப்பாக்கியையும் மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.