
நேற்றைய தினம் குறைந்தளவிலான தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டுள்ளனர்..!
சில வாரங்களின் பின்னர் நாட்டில் 400க்கும் குறைந்தளவான கொவிட்19 தொற்றுறுதியானவர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அண்மைய நாட்களில் தொடர்ந்தும் 500 இற்கும் மேற்பட்ட கொவிட் 19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் மொத்தமாக 370 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 37,631ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 364 பேரும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 6 பேரும் அடங்குவதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை, பேலியகொடை மீன் சந்தை மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய கொவிட் 19 தொற்றுறுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 954 ஆக உயர்வடைந்துள்ளது.
8 ஆயிரத்து 773 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம், நேற்றைய தினம் 415 கொவிட் 19 நோயாளர்கள் குணமடைந்தனர்.
இதன்படி, நாட்டில் இதுவரையில் 28 ஆயிரத்து 682 நோயாளர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அதேநேரம் இதுவரையில் 181 பேர் இந்த நோயினால் மரணித்துள்ளனர்.
இதற்கிடையில் கண்டி மாவட்டத்தில் நேற்றைய தினம் 41 பேர் கொவிட் 19 நோயுடன்அடையாளம் காணப்பட்டனர்.
இதன்படி அங்கு மொத்தமாக 844 பேர் கொவிட் நோயுடன் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 36 பேர் அக்குறனையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி அக்குறனை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ள கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 260ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த 16 பேர் கொவிட் நோய்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த வைத்தியசாலையின் அதிகாரிகள் யாரும் இதுவரையில் தனிமைப்படுத்தப்படவில்லை என, அரச தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தற்போது சிவனொளிபாதமலைக்கான யாத்திரைகாலம் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், இந்த யாத்திரைக்காக சிவனொளிபாதமலைக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அமேஸ் ப்ரதாபசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
யாத்திரை ஊடாக கொவிட் நோய்த்தொற்று மேலும் அதிகரிக்கலாம் என்பதால், இந்த யாத்திரையை மேற்கொள்ள வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, கொவிட் 19 நோய்த்தொற்றுறுதி செய்யப்பட்ட அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளருடன் தொடர்பில் இருந்த பலர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 16ம் திகதி பீ.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த போதும், பொறுப்பற்றவகையில் நடந்துக் கொண்ட குறித்த பிரதேசசபையின் தவிசாளருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் யாழ்ப்பாணம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடைய நோயாளர் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றையதினம் அங்கு 3 பேர் கொவிட்தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.