நாட்டில் மிக வேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!
அக்கரபத்தனை பிரதேசசபை தலைவருக்கு இரண்டாவது தடவையாக மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையிலும் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தலவாகலை லிந்துலை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி அகரப்பதனை தோன்பீல்ட் தோட்டத்தில் மரணவீட்டிக்கு கொழும்பிலிருந்த வருகை தந்த பெண்ணொறுவருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த தோட்டத்திலுள்ள 300 பேர் வரையில் பி.சிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதன் போது ஐந்து வயது பிள்ளைக்கு தொற்றுறுதியானதையடுத்து தோன்பீல்ட் தோட்டத்தை சேர்ந்த அக்கரபத்தனை பிரதேசசபை தலைவர் கதிர்செல்வனுக்கும் கடந்த 16 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை
மேற்கொள்ளபட்டு குடும்ப உறுப்பினர்களுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் கடந்த 20 ஆம் திகதி அவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானமை தெரியவந்தது.
எனினும் தனிமைப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் கண்டி மற்றும் தலவாக்கலை பகுதிகளில் இடம்பெற்ற கூட்டங்களில் அவர் கலந்துகொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக அக்கரபத்தனை பிரதேசசபை தலைவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் இன்றைய தினம் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலும் தொற்றுறுதியாகியுள்ளது.
இதேவேளை, லிந்துலை சுகாதார மருத்துவ காரியாலயத்திற்குட்பட்ட பிரிவில் பதினைந்து கொரோனா நோயாளிகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் அடங்கியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
டயகம மேற்கு தோட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கும், அக்கரப்பத்தனை நியூ போர்ட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கும், லிந்துலை வோல்ட்ரீம் தோட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுதியாகியுள்ளது.
டயகம மேற்கு 4ம் பிரிவு தோட்டத்திற்கு கடந்த 11ம் திகதி கொழும்பிலிருந்து வருகை தந்த மத தலைவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்டது.
கொழும்பிலிருந்து வருகை தந்த அவரிடம் கினிகத்தேனை - களுகல பகுதியில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்;டது.
இதனையடுத்து, அவர் டயகம மேற்கு 4ம் பிரிவு தோட்டத்தில் அவரின் உறவினர் வீட்டில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டதுடன் அந்த பகுதியில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளிலும் பங்கேற்றுள்ளமை விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
அதன் பின்னர், அந்த குதியில் உள்ள 10 குடும்பங்களை சேர்ந்த 50ற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இதில் கடந்த 14ம் திகதி குறித்த மத தலைவரின் உறவினர் வீட்டில் இருந்த 12 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 11 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளமை இன்று தெரியவந்துள்ளது.
ஏனைய பகுதிகளில் உள்ள தொற்றுறுதியானவர்கள், கொழும்பு பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும், குடும்ப உறுப்பினர்களும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொற்றுறுதியானவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர்.
இதேவேளை, பதுளை மாவட்டத்தில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது.
ஹப்புத்தளை மற்றும் லுணுகல பிரதேச செயலக பிரிவுகளில்; மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் இருவருக்கு தொற்றுறுதியான நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அத்துடன் ஆயிரத்து 679 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
பதுளை மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்களில் 14 பிரதேச செயலகங்களில் கொவிட் 19 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் தொற்றுறுதியானவர்கள் அடையாளங்காணப்படாத சொரனாதொட்ட மற்றும் ரிதிமாலியத்த ஆகிய பிரதேச செயகலங்களிலும் கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் பதிவாகியுள்ளனர்.
எனினும் பதுளை மாவட்டத்தில் தொற்றுறுதியானவர்கள் அடைளயாளங்காணப்படாத ஒரே பிரதேச செயலகமாக மீகஹகிவுல மாத்திரம் உள்ளதாக மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, திருகோணமலையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களையும் தற்காலிகமாக மூடுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா திருகோணமலை நகர கிளை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கோரிக்கை அடங்கிய கடிதம் திருகோணமலையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் தலைவர்கள் மற்றும் செயலாளருக்கும் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா திருகோணமலை நகர கிளையினர்- மற்றும் அனைத்துப் பள்ளிவாசல்களின் சம்மேளனமும் இணைந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கதைய கிழக்கு மாகாண சுகாதார பணிமனையின் ஆலோசனைகளையும் மாவட்டத்தின் சுகாதார நலன் கருதியும் இன்று பிற்பகல் அசர் தொழுகையுடன் மறு அறிவித்தல் வரை பள்ளிவாசல்களின் நடைபெறும் ஐவேளைத் தொழுகை மற்றும் ஜும்மா தொழுகை எதுவும் நடைபெற மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அனைத்து முஸ்லிம்களும் வீடுகளில் தொழுகை இஸ்திக்பார் போன்ற அமல்களில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்வதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.