அநுராதபுரத்தில் இரவு வேளை இடம்பெற்ற சம்பவம்- ஸ்தலத்தில் கைரேகை அடையாளங்களைப் பெறும் பொலிஸார்!
திருகோணமலை அனுராதபுரம் சந்தியில் உள்ள கடை ஒன்றின் கூரையை கழற்றி பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முறைபாட்டினை கடை உரிமையாளரான பாலரட்ணம் ரஜீந்திரன் இன்று பதிவு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடையின் உரிமையாளர், அனுராதபுர சந்தியில் கடை ஒன்றினை வாடகைக்கு பெற்று சில்லரை விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், இரவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்ற நிலையில், கடையின் கூரையை கழற்றி பணத்தையும், சில்லறை பொருட்களையும் திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து விசேட பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், கைரேகைகளை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.
கடந்த சில மாதங்களாக உப்புவெளி பொலிஸ் பிரிவில் அதிகளவிலான திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், மது பாவனை காரணமாகவே இவ்வாறான சம்பவம் இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனாலும் குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
