வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு பிரதமர் பணிப்புரை..!
குறைந்தளவிலான வசதி கொண்ட குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான 7,500 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு பணிப்பரை விடுத்துள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டங்கள் தொடர்பில் அந்த அதிகாரசபையின் அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய இந்த மாத இறுதிக்குள் குறித்த வீட்டுத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை உறுதியளித்துள்ளது.
புதிதாக நிர்மாணிக்கப்படும் 7,500 வீடுகளில், 4 ஆயிரம் வீடுகள் குறைந்த வசதி கொண்ட குடியிருப்புகளில் வசிப்போரை மீள்குடியேற்றுவதற்காக நிர்மாணிக்கப்படுவதுடன், எஞ்சிய 3 ஆயிரம் வீடுகள் நடுத்தர வர்க்கத்தினருக்காக ஒதுக்கப்படவுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நடுத்தர வர்க்கத்தினருக்காக வீடுகளை பெற்றுக் கொடுக்கும் போது குறைந்தபட்ச ஆரம்ப கொடுப்பனவில் வீட்டு உரிமையை பெற்றுக் கொடுக்கும் முறையொன்றை உருவாக்குமாறு பிரதமர் இதன்போது நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு பணிப்பு விடுத்துள்ளார்.
அதற்கமைய மத்திய வர்க்கத்தினருக்கான வீடமைப்பு திட்டத்தை செயற்படுத்தும் போது பயனாளர்களுக்கு 30 ஆண்டுகள் வரை 6.25 என்ற வட்டி வீதத்தில் வீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
பல காலமாக செயற்படுத்துவதாக தெரிவித்து தாமதிக்கப்பட்டு வந்து தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள வாகனத் தாிப்பிடங்களின் பணிகள் தொடர்ந்தும் தாமதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.
அதற்கமைய அரச காணிகளை பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்களில் அவற்றை பெற்று இந்த வாகனத் தாிப்பிட வேலைத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு அதிகாரிகளின் ஒப்புதல் கிட்டியுள்ளது.
2015ஆம் ஆண்டுக்கு முன்னர் அடிக்கல் நாட்டப்பட்ட வீடமைப்பு திட்டம் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் இடைநடுவே நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த அனைத்து வீடமைப்பு திட்டங்களினதும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் குறித்த சந்திப்பின்போது தெரிவித்துள்ளனர்.
எதிர்காலத்தில் கலைஞர்களுக்காகவும் வீடமைப்பு திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
2024ஆம் ஆண்டளவில் 150,000 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்ய நகர அபிவிருத்தி அதிகாரசபை எதிர்பார்க்கிறது.
பல்வேறு நிதி உதவிகளின் கீழ் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டங்கள் வடக்கு, தெற்கு மற்றும் மலையகத்திற்கு மாத்திரமின்றி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சாதாரண மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.