நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 688 பேருக்கு கொரோனா..!
நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 688 கொவிட் 19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 478 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில், 627 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலில் இருந்த 3 கடலோடிகளுக்கும் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானது.
இதன்படி, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை, பேலியகொடை மீன் சந்தை மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய கொவிட் 19 தொற்றுறுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 29 ஆயிரத்து 837 ஆக உயர்வடைந்துள்ளது.
9 ஆயிரத்து 15 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம், நேற்றைய தினம் 516 கொவிட் 19 நோயாளர்கள் குணமடைந்தனர்.
இதன்படி, நாட்டில் இதுவரையில் 24 ஆயிரத்து 309 நோயாளர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.