இலங்கையில் கொரோனா பானம்! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா பானம்! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கொரோனா தொற்றுக்கான உள்நாட்டு மருந்து எனக் கூறி, இலங்கையில் இணையத்தளங்களில் விற்கப்படும் மருந்து வகைகளை பயன்படுத்த வேண்டாம் என உள்நாட்டு மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி, சமூக சுகாதார இராஜாங்க அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர தெரிவித்துள்ளார்.

இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஆயுர்வேதம் மற்றும் உள்நாட்டு மருத்துவம் ஆகியவற்றின் ஊடாக மருந்தொன்றை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அவ்வாறு பயன்படுத்தப்படும் மூலிகைகளின் எந்த பாகத்தை பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் கை மருந்தை தவிர, வேறு எந்தவொரு மூலிகை மருந்தையும் அருந்த வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மருந்து வகைகள் தொடர்பிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், அது தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டல்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.