முழுமையான விபரங்களுடன் நேற்றைய கொரோனா மரணங்கள்..!

முழுமையான விபரங்களுடன் நேற்றைய கொரோனா மரணங்கள்..!

இலங்கையில் மேலும் மூன்று கொவிட்-19 மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, நாட்டில் பதிவான கொவிட் 19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 152 ஆக உயர்வடைந்துள்ளன.

கொழும்பு - 10 பகுதியை சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுறுதியானவராக கண்டறியப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர், முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அந்த வைத்தியசாலையில் கடந்த 12 ஆம் திகதி உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் மற்றும் மாரடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, வத்தளை பகுதியை சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இருந்து தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 12 ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட்19 தொற்றுடன் நிமோனியா காய்ச்சல், குருதி விசமானமையினால் ஏற்பட்ட கடுமையான மாரடைப்பு என்பன அவரது மரணத்திற்கான காரணமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாத்தளை பகுதியை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுறுதியானவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அன்பின்னர் அவர், அநுராதபுரம் மாவட்ட வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அந்த வைத்தியசாலையில் கடந்த 12 ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட் தொற்றினால் ஏற்பட்ட நியுமோனியா நிலை மற்றும் இதயம் செயலிழந்தமை அவரது மரணத்திற்கான காரணமாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டு அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.