ஜனவரி முதலாம் திகதி வருகிறது புதிய நடைமுறை! முக்கிய அறிவித்தல்
கொழும்பில் Park & Ride எனப்படும் தனிப்பட்ட வாகனப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலான போக்குவரத்து திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இத்திட்டம் குறித்து தெரிவித்துள்ளார். இதன்போது பேசிய அவர்,
Park & Ride போக்குவரத்து செயற்றிட்டத்தின் முதலாவது கட்டம், மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன் மூலம், கொழும்பு நகருக்குள் வருகை தரும் வாகனங்களின் எண்ணிக்கையை கணிசமான அளவில் கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறேன்.
சொந்த வாகனங்களில் வருகை தருபவர்கள், மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் தமது வாகனங்களை நிறுத்திவிட்டு, சொகுசு பேருந்துகளின் மூலம் கொழும்புக்கு வருகை தர முடியும்.
இதற்காக 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை என்ற அடிப்படையில் சொகுசு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இந்த பேருந்துகளில் Wi-Fi மற்றும் GPS கண்காணிப்பு வசதிகளும் இணைக்கப்படும்.
பணப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், இலத்திரனியல் பயணச் சீட்டு வழங்கும் செயற்றிட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளது என்றார்.