மஹர சிறைச்சாலையில் களேபரத்தை தூண்டியது யார்? சி.ஐ.டியின் தீவிர விசாரணைக்குள் வைத்தியர்கள்!

மஹர சிறைச்சாலையில் களேபரத்தை தூண்டியது யார்? சி.ஐ.டியின் தீவிர விசாரணைக்குள் வைத்தியர்கள்!

தென்னிலங்கையின் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற களேபரம் தொடர்பில் 8 மருத்துவர்கள் மற்றும் 26 பேரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணைக் குழு வாக்குமூலம் பதிவுசெய்து கொண்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மஹர சிறையில் இடம்பெற்ற கலவரம் குறித்து விசாரணைகளை நடத்த நியமிக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட விசாரணைக் குழு 48 மணி நேரத்துக்குள் மஹர சிறை வைத்தியசாலையில் கடமையாற்றிய 8 வைத்தியர்கள், பிரதான சிறை பாதுகாவலர் உள்ளிட்ட 26 பேரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானி பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் நேரடி கட்டுப்பாட்டில், அதன் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த சொய்ஸாவின் ஆலோசனைக்கு அமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சி.ஐ.டி.யின் பொலிஸ் அத்தியட்சகர் ரந்தெனியவின் கீழ் 12 பேர் கொண்ட சிறப்புக் குழுவே இந்த விசாரணைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விசாரணைகள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

அவர் தெரிவித்திருப்பதாவது,

சி.ஐ.டி.யினர் இந்த சம்பவம் தொடர்பில் 26 வாக்கு மூலங்கள் வரை இதுவரை பதிவு செய்துள்ளனர். விசேடமாக மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் சேவையாற்றிய 8 வைத்தியர்களில், ஆண் தாதியர்கள் இருவரும் இதில் உள்ளடங்குவர்.

இதனைவிட சிறைச்சாலையின் பிரதான பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட 10 சிறைச்சாலை அதிகாரிகளின் வாக்கு மூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இந்த களேபரத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளை முடித்துக்கொண்டு மீள சிறைக்கு திரும்பிய 6 கைதிகளிடமும் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளன.

அதன்படி இந்த சம்பவம் தொடர்பில் 26 வாக்கு மூலங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறைச்சாலைக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை கணக்கீடு செய்தல், சிறைக் கைதிகளுக்கு இந்த களேபரத்தை தூண்டிய அல்லது திட்டமிட்ட வெளி நபர்கள் தொடர்பிலும் சி.ஐ.டி. விசாரணையில் அவதானம் செலுத்தியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.