வள்ளத்தை மீட்க சென்றவர் நீரில் மூழ்கி மாயம்

வள்ளத்தை மீட்க சென்றவர் நீரில் மூழ்கி மாயம்

வங்களா விரிகுடாவில் உருவாகிய “புரெவி” புயல் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் நேற்று (02) காலை முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது கனமழை பெய்து வந்ததுடன், நேற்றைய தினம் (02) மாலை முதல் கடுமையான காற்றுடன் கூடிய மழை பொழிந்த நிலையில் இன்றும் மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் மழை மற்றும் காற்று காரணமாக நந்திக் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த வள்ளம் ஒன்று நந்திக்கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளது

இந்நிலையில் இன்று காலை 10.00 மணிக்கு குறித்த வள்ளத்தை கரைக்கு கொண்டு வருவதற்காக தனது சகோதரனுடன் பிறிதொரு வள்ளத்தில் சென்று காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தில் ஏறியபோது குறித்த வள்ளத்துடன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் அவரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

கேப்பாபுலவு மாதிரிக் கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளில் தந்தையான 26 வயதுடைய ஜெயசீலன் சிலக்சன் என்பவரே காணாமல் போயுள்ளார்

சம்பவத்தை தொடர்ந்து கடற்படையினர் இராணுவத்தினர் மீனவர்கள் இணைந்து நந்திக்கடல் களப்பில் குறித்த மீனவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்