சங்கடங்கள் தீரவும், சந்தோஷம் நிலைக்கவும் உதவும் கணபதி விரதம்

சங்கடங்களைத் தீர்க்கும் தெய்வமாக விநாயகப்பெருமான் திகழ்கிறார். ஒருவருக்கு மனதாலும், பணத்தாலும் வரும் சங்கடங்கள் தீரவும், சந்தோஷம் நிலைக்கவும், கணபதியை ‘சங்கடஹர சதுர்த்தி’ நாளில் விரதம் இருந்து வழிபட வேண்டும்.

ஒவ்வொருவருக்கும், கோரிக்கைகள் மாறுகின்றன. தேவைகள் மாறுகின்றன. அந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலான தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குரிய சிறப்பு நாட்களில் விரதம் இருந்தால், அந்தக் கோரிக்கைகள் நல்ல முறையில் நிறைவேறும். அதன்படி சங்கடங்களைத் தீர்க்கும் தெய்வமாக விநாயகப்பெருமான் திகழ்கிறார். ஒருவருக்கு மனதாலும், பணத்தாலும் வரும் சங்கடங்கள் தீரவும், சந்தோஷம் நிலைக்கவும், கணபதியை ‘சங்கடஹர சதுர்த்தி’ நாளில் விரதம் இருந்து வழிபட வேண்டும்.

 

சதுர்த்தி திதி என்றாலே நம் நினைவிற்கு வருபவர் கணபதி. ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும் சதுர்த்தி ‘விநாயகர் சதுர்த்தி’ ஆகும். சதுர்த்தி திதி தேய்பிறையில் வந்தால் அது ‘சங்கடஹர சதுர்த்தி’ என்று அழைக்கப்படுகிறது. சதுர்த்தி தினத்தன்று காலையில் எழுந்து உடலையும், உள்ளத்தையும் சுத்தமாக்கி, அன்றைய தினம் சந்திரன் உதயமாகும் வரை எந்த உணவையும் உண்ணாது, விநாயகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

 

வழிபாடு செய்வதற்காக மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். மேலும் மாலை அணிவிப்பதற்காக விநாயகர் படம் அல்லது விக்கிரகமும் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். அர்ச்சனை செய்வதற்கு மஞ்சள் கலந்த அட்சதை பூக்கள், வாசனை மிக்க பூக்களால் ஆன மாலைகள், பஞ்சபாத்திரம். தீர்த்த பாத்திரத்தில் சுத்தமான நீர், மணி, தூபக்கால், தீபத்தட்டு, கற்பூரம், குத்துவிளக்கு, திரி, எண்ணெய், ஊதுபத்தி, சாம்பிராணி, விபூதி, குங்குமம், அமர்ந்து பூஜை செய்வதற்கு பலகை, இனிப்புச் சுவையுடைய நைவேத்தியப் பொருட்கள் வைத்து வழிபாடு செய்யலாம்.

 

 

இவற்றை யெல்லாம் வைத்துக் கொண்டு பூஜையறையில் ஐந்துமுக விளக்கேற்றி, உள்ளங்கையை தீர்த்தத்தால் சுத்தம் செய்து பிறகு தீர்த்தத்தைப் பருகி ‘ஓம் அச்யுதாய நம’ என்றும், ‘அனந்தாய நம’ என்றும் மூன்றுமுறை சொல்ல வேண்டும். பிறகு இரண்டு உள்ளங்கைகளிலும் மஞ்சள் அரிசியான அட்சதையை வைத்துக் கொண்டு, ‘சுக்லாம்பரதம் விஷ்ணும் சசிவர்னம் சதுர்புஸம், ப்ரஸன்ன வதனம் த்யோயேத் ஸர்வ வின்னோப சாந்தயே’ என்று கூறிய படி தலையில் ஐந்துமுறை குட்டிக் கொள்ள வேண்டும். பிறகு தியானம் செய்ய வேண்டும். தங்களுக்குத் தெரிந்த விநாயகர் அகவல், விநாயகர் பாடல், மந்திரங்களைச் சொல்லி மனமுருகி விநாயகரை வழிபட வேண்டும்.

 

பூஜை செய்யும் பொழுது நைவேத்தியமாகப் படைக்கும் கொழுக்கட்டையை, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கொடுத்துவிட்டு இரவு விரதமிருந்தவர்கள் அந்தக் கொழுக்கட்டையை சாப்பிட்டு பால் அருந்தலாம். இயலாதவர்கள் உடல் நலம் கருதி இரவு உணவை பலகாரமாக உட்கொள்ளலாம். பகலில் பால் அல்லது பழச் சாறு குடித்துக் கொள்ளலாம்.

 

பூஜையால் பலன் பெற்றவர்கள் :

 

பார்வதி தேவி, சிவபெருமான், அரிச்சந்திரன் ஆகியோர் சதுர்த்தி விரதம் இருந்து சங்கடம் நீங்கியுள்ளனர். சீதையைத் தேடுவதற்காக அனுமன் இவ்விரதத்தை மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இவ்விரதத்தை மேற்கொண்ட தேவேந்திரன் மூவுலகத்தையும் ஆண்டிருக்கின்றார். பஞ்சபாண்டவர்கள் நாடிழந்து வனவாசம் சென்ற பொழுது இந்த விரதத்தை பகவான் விஷ்ணுவின் அறிவுரைப்படி மேற்கொண்டு குருச்சேத்திரப் போரில் பகைவர்களை வென்றிருக்கின்றனர். கந்தக் கடவுளாம் முருகக் கடவுளே தவத்தில் சிறந்த முனிவர்களிடம் மனிதர்களின் சிக்கல்கள் தீர, விநாயகப் பெருமானுக்குரிய இந்த சங்கடஹர சதுர்த்தியைத் தான் வலியுறுத்திக் கூறியிருக்கின்றார் என்று சான்றோர்கள் எடுத்துரைப்பார்கள்.

 

போராட்டங்களைச் சந்தித்தவர்களெல்லாம் இந்த விரதத்தினால் பலன் பெற்றிருப்பதால் நாமும் சங்டஹர சதுர்த்தி விரதத்தை முறைப்படி மேற்கொண்டு மனக்கஷ்டமும், பணக்கஷ்டமும் இல்லாமல் வாழலாம். சங்கடஹர சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடிப்போம். சந்தோஷத்தோடு வாழ்வில் வளம் சேர்ப்போம்.