புரெவி புயலினால் பாதிப்புக்கள் குறைவு - அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை!

புரெவி புயலினால் பாதிப்புக்கள் குறைவு - அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை!

புரெவி புயல் இலங்கையினுள் புகுந்த பிறகு நாட்டினுள் கடுமையான பாதிப்புக்கள் எதுவரும் இதுவரை பதிவாகவில்லை என அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ள சம்பவங்கள் பல இடங்களில் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த அனர்த்த நிலை காரணமாக ஒருவர் மரணமடைந்துள்ளதாக இன்று காலை அததெரணவுடன் இணைந்து கொண்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாரத்ன தெரிவித்தார்.

பாரியளவான சொத்து சேதங்கள் பதிவாகவில்லை எனவும், மரம் முறிந்து விழுதல், போக்குவரத்து தடைப்படுதல் போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சூறாவளி நிலைமை காரணமாக நேற்றிரவு பூராகவும் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களில் கடும் காற்றுடன் மழை பெய்து வந்துள்ளது

புரெவி சூறாவளி முல்லைத்தீவு மற்றும் திருகோணமலைக்கு இடையில் தரையை தட்டி நேற்று (02 ) 8.45 மணியளவில் இலங்கைக்குள் பிரவேசித்தது.

இந்தச் சூறாவளி முல்லைத்தீவு ஊடாக நகர்ந்து மன்னார் ஊடாக இன்று அதிகாலை அரபிக்கடலை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூறாவளி நாட்டை ஊடறுத்துச் செல்லும் என்பதால் நாட்டில் மினி சூறாவளி ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சூறாவளி காரணமாக காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 – 90 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும் சில சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வரை உயர்வதற்கு சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.