கொழும்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்கள் அதிகரிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்கள் அதிகரிப்பு!

இன்று (27) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 559 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டவர்கள். குறித்த தொற்றாளர்களில் 253 பேர் கொழும்பு மாவட்டம், 65 பேர் கம்பஹா மற்றும் 35 பேர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர் என கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இன்று (26) காலை வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,487 பேர் ஆகும். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணி தொற்றாளர்களில் மொத்தம் 12,437 பேர் சுகமடைந்து வெளியேறியுள்ளனர்.

அதன் பிரகாரம் 25 ஆம் திகதி வரையான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 22,028 ஆகும். அவர்களில் 15,815 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். 6,113 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்திற்குள் முழுமையாக சுகமடைந்த 369 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதனடிப்படையில் இதுவரை கொவிட்-19 தொற்று நோய் காரணமாக மரணமடைந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 99 ஆகும். நேற்று இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக 03 மரணங்கள் பதிவாகியுள்ளன.

நேற்று நவம்பர் 26 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 12,105 ஆகும்.