உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள தகவல்
தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால், அவர்களால் பெருமளவானோருக்கு எச்சரிக்கை ஏற்படுமாயின் குறித்த பிரதேசங்களை மீண்டும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,
கொழும்பிலிருந்து மத்திய மலைநாட்டை அண்மித்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தோம். எனினும் அந்த அறிவித்தலை மீறிச் சென்ற நபர் ஒருவரால் மஸ்கெலியாவில் தொற்று பரவல் ஏற்பட்டது.
இதேபோன்று கொட்டாஞ்சேனையிலிருந்து சென்ற நபரொருவராலேயே நுவரெலியாவிலும் தொற்று இனங்காணப்பட்டது.
தொற்றாளர் ஒருவர் சென்றமையினாலேயே குறித்த இரு பிரதேசங்களிலும் வைரஸ் பரவல் இனங்காணப்பட்டுள்ளதாக புலனாய்வுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொற்றாளர்கள் இனங்காணப்படமாட்டார்கள் என்று கூற முடியாது.
அவ்வாறு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் அவர்களின் தொடர்புகள் குறித்து ஆராய்ந்த பின்னர், பெருமளவானவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமென கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதற்கமைய தேவையேற்படின் மீண்டும் தனிமைப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். எச்சரிக்கை இல்லை என்றால் தனிமைப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என்றார்.