பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தில் வந்த வெடிபொருட்கள்: பெரிய தாக்குதல் திட்டம் என்கிறது இராணுவம்!

பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தில் வந்த வெடிபொருட்கள்: பெரிய தாக்குதல் திட்டம் என்கிறது இராணுவம்!

இந்தியாவால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்த நிலையில் பெரும் பயங்கரவாதத் தாக்குதலுக்கான திட்டமென இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர், கத்துவா மாவட்டத்தில் ஆயுதங்கள் நிரப்பப்பட்ட பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இன்று காலை (சனிக்கிழமை) சுட்டு வீழ்த்தினர்.

இது குறித்து எல்லை பாதுகாப்புப் படையின் (Border Guarding Force) தலைமை ஆய்வாளர் என்.எஸ்.ஜம்வால் கூறுகையில், “வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானத்தில் அமெரிக்கத் தயாரிப்பு எம்-4 இயந்திரத் துப்பாக்கி, ஆயுதங்கள், 7 கைக்குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

பாகிஸ்தான் பக்கத்திலிருந்து இந்தியப் பகுதிக்குள் இந்த விமானம் பறந்து வந்தது. இந்தியப் பகுதிக்குள் 200-250 மீற்றர் வந்தபிறகே நாம் சுட்டு வீழ்த்தினோம். அப்போதுதான் அதில் அமெரிக்கத் தயாரிப்பான எம்-4 தன்னியக்க இயந்திரத் துப்பாக்கி, 60 தடவைகளுக்கான குண்டுகள், 7 கைக்குண்டுகள் ஆகியவற்றைக் கைப்பற்றினோம்.

அந்த ஆளில்லா விமானம், சுமார் 18 கிலோ எடை இருந்தது. அதில் 5 முதல் 6 கிலோ எடைகொண்ட பொருட்கள் இருந்தன. இந்த விமானத்தின் பாகங்கள் சீனத் தயாரிப்பாகும்.

இதிலிருந்த ஆயுதங்கள், வெடிபொருட்களைப் பார்க்கும்போது இந்தியப் பக்கத்தில் ஒன்றரை கிலோமீற்றர் தூரத்தில் யாரோ இந்த ஆயுதங்களைப் பெறுவதற்குக் காத்திருந்ததுபோல் தெரிகிறது. இதன்மூலம் பெரிய பயங்கரவாதத் தாக்குதலை திட்டமிட்டிருக்கலாம். இவ்வாறு ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்படுவது இதுவே முதன்முறையாகும்” என்று குறிப்பிட்டார்.