
பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா!
ஜம்மு – காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உளவு பார்க்க வந்த பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானத்தை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) காலை 5.30 மணியளவில் பன்சார் எல்லைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் குறித்த விமானம் பறந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்த விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், காலை 8.50 மணியளவில் பாகிஸ்தான் படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனையடுத்து எல்லைப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.