டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பில் அவதானம்
2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்களால் கலந்து கொள்ள முடியும் என்ற மிகுந்த நம்பிக்கை இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகத்தின் தலைவர் தோமஸ் பாக் தெரிவித்துள்ளார்.
போட்டிகளை காண ரசிகர்கள் வருவதற்கு முன்பு தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்வதில் சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகம் பெரும் முயற்சிகளை முன்னெடுக்கும் என்றும் தோமஸ் பாக் கூறினார்.
அடுத்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை எவ்வாறு நடத்த முடியும் என்பது குறித்து விவாதிக்க அவர் தற்போது ஜப்பானில் உள்ளார்.
2020 ஆம் ஆண்டுக்கான டோக்கியோ விளையாட்டுக்கள் முதலில் கடந்த ஜூலை மாதம் தொடங்கவிருந்தன, ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த 11,000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.