
நாடாளுமன்றில் இன்று இடம்பெறவுள்ள முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதம்
முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.
அதேநேரம் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியல்லவின் கோரிக்கைக்கு அமைய நாளை நாடாளுமன்றததை கூட்டுவதற்கும் எதிர்கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவும் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி, 2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பான வாசிப்பு மற்றும் குழுநிலை விவாதம் என்பன
மாத்திரமே இன்றையதினம் இடம்பெறும்.
இன்று மதியபோசன இடைவேளை இன்றி 2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பாக முற்பகல் 10.00 மணிமுதல் பிற்பகல் 5.00 மணிவரை விவாதம் இடம்பெறும்.
எதிர்கட்சியினரால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை தொடர்பான விவாதம் நாளை முற்பகல் 10.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணிவரை இடம்பெறும்.
இதேவேளை, அடுத்த வருடத்திற்கான பாதீட்டின் மீதான விவாதத்தை 19 நாட்களுக்கு மட்டுப்படுத்த நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய சாதாரணமாக பாதீடு குறித்து இடம்பெறும் விவாத காலம் ஒருவாரத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், எதிர்வரும் 17ஆம் திகதி நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவால் அடுத்த வருடத்திற்கான பாதீடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.