வென்டிலேட்டர் இணைப்பை உறவினர்கள் துண்டித்ததால் உயிரிழந்த கொரோனா நோயாளி- சிறப்பு குழு விசாரணை

வென்டிலேட்டர் இணைப்பை உறவினர்கள் துண்டித்ததால் உயிரிழந்த கொரோனா நோயாளி- சிறப்பு குழு விசாரணை

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள எம்பிஎஸ் மருத்துவமனையின் கோரோனா சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை பற்று வரும் ஒரு நோயாளியை பார்ப்பதற்காக குடும்பத்தினர் வந்துள்ளனர். அந்த நோயாளிக்கு வென்டிலேட்டர் மூலமாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது.


அப்போது, அந்த அறை மிகவும் சூடாக இருந்ததால், வென்டிலேட்டர் இணைப்புக்கான பிளக்கை பிடுங்கிவிட்டு, அதில் ஏர் கூலருக்கான பிளக்கை சொருகி உள்ளனர். வென்டிலேட்டர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, பேட்டரி தீர்ந்ததால் நோயாளியின் நிலைமை மோசமடைந்தது. உடனடியாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். நோயாளியின் உயிரைக் காப்பாற்ற தீவிர முயற்சி செய்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். 15ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது. நோயாளி இறந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள், ரகளையில் ஈடுபட்டனர். பணியில் இருந்த மருத்துவர்களை தாக்கி உள்ளனர். இதனால் கோபமடைந்த மற்ற மருத்துவர்கள், பணியை புறக்கணித்து சிறிது நேரம் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

நோயாளியின் இறப்பு குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தனது விசாரணை அறிக்கையை இன்று மாலை தாக்கல் செய்ய உள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் காவல்துறையிடம் புகார் அளிக்கப்படும்.