
பெருமளவில் சிக்கிய சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மஞ்சள்!
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 3650 கிலோ கிராம் மஞ்சளுடன் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி ஏத்தாளை மற்றும் பெரியபாடு ஆகிய கடற்பிரதேசத்தில் வைத்து கைப்பற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏத்தாளை பிரதேசத்தில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது 2045 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து குறித்த மஞ்சளை ஏற்றிச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றும், மோட்டார் சைக்கில் ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியபாடு கடற்பிரதேசத்தில் கடற்படையினர் மேற்கொண்ட மற்றுமொரு தேடுதல் நடவடிக்கையின் போது 1600 கிலோ கிராம உலர்ந்த மஞ்சளுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு டிங்கி இயந்திரப் படகுகளும், கெப் வண்டி ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 வயது முதல் 64 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் இவர்கள் புத்தளம், ஏத்தாளை, கொத்தாந்தீவு, பாலாவி மற்றும் மதுரங்குளி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சள் மூடைகள் கிருமி தொற்று நீக்கி தெளித்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.