
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் தற்போதைய நிலவரம்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 67 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
தேசிய தொற்று நோய் வைத்தியசாலை, காத்தான்குடி, தெல்தெனிய, ஹோமாகம மற்றும் கல்கமுவ ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்தவர்களே இவ்வாறு குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 142 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை மற்றும் அவரது தாய்க்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளான இருவரும் கொழும்பு 12 அளுத்கடை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொது சுகாதார பரிசோதகர் அனுர திலகசிறி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 11 வயதுடைய சிறுமி ஒருவரும் 38 வயதுடைய அவரது தாயுமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, குறித்த இருவரும் முல்லேரியாவில் உள்ள தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் அனுர திலகசிறி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நால்வருக்கும், சாரதி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பேலியகொடை மீன் சந்தைக்குச் சென்றுவந்த ஒருவர் தொழில் திணைக்களத்தின் தரைத்தளத்தில் உணவகமொன்றை நடாத்திவந்த நிலையில், அவர் மூலமாக குறித்த நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 205 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மேலும், 435 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 5 ஆயிரத்து 44 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்காக 4 இலட்சத்து 80 ஆயிரத்து 838 பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.