தேவையற்ற பீதியை ஏற்படுத்தாதீர் -மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் உள்ள வீடுகளின் அருகாமையில் வாழும் மக்கள் தேவையற்ற பீதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹெமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் உள்ள வீடுகளுக்கு அருகாமையில் உள்ளவர்கள் தேவையற்ற பீதியையோ சந்தேகத்தையோ ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் தொற்று நோய்க்கு உள்ளானவர்கள் அல்லர் என்றார்.
நோய்க்கு உள்ளாகியிருந்தால் அவ்வாறான அனைவரையும் வைத்தியசாலையில் அனுமதிப்போம் அல்லது அழைத்து செல்வோம். இந்த நோயின் தொடர்பில் முதல் தொற்றுக்கு (first contact) உள்ளானவர் மாத்திரமே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் உரிய முறையில் வீடுகளில் இருந்து வெளியே செல்லாமல் வீடுகளிலேயே தங்கியிருந்து தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்யவேண்டும். அதுவே பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் மேலும் கூறினார்.