24 மணி நேரத்தில் புதிதாக 45,149 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 79 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 79 லட்சத்தை கடந்துள்ள நிலையில், 71.37 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகில் வேகமாக வைரஸ் பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த மாதம் தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து 50 ஆயிரத்திற்கும் கீழ் வந்துள்ளது. குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 79 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த பாதிப்பு 79,09,960 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 480 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,19,014 ஆக உயர்ந்துள்ளது.

 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 71,37,229 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 59,105 பேர் குணமடைந்துள்ளனர். புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட அதிக நபர்கள் குணமடைந்துள்ளனர்.

 

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,53,717 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.50 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 90.23 சதவீதமாக உயர்ந்துள்ளது.