தற்காலிகமாக மூடப்பட்ட வர்த்தக நிலையங்கள்..! ஹட்டனில் சம்பவம்
ஹற்றன் மற்றும் பொகவந்தலாவ பகுதிகளில் முதலாவதாக கொரோனா தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பேலியகொடை கொத்தணி தொடர்பின் அடிப்படையில் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக குறித்த பிரதேசங்களின் பொது சுகாதார பரிசோதகர்கள் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தனர்.
ஹற்றனில் காமினிபுற பகுதியை சேர்ந்த 42 வயதுடைய மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கே கொவிட்-19 தொற்றுறுதியானது.
ஹற்றன் - டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் இராமையா பாலகிருஷ்ணன் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில், குறித்த நபரின் மீன் விற்பனை நிலையம் உட்பட அந்தப் பகுதியில் உள்ள விற்பனை நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அவருடன் தொடர்புடைய அனைவரையும் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஹற்றன் - டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
இதேநேரம், பொகவந்தலாவை - கொட்டியாகல மத்திய பிரிவை சேர்ந்த 23 வயதுடைய ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக பொகவந்தலாவை பொது சுகாதார பரிசோதகர் கதிர்வேல் ஜெயகணேஷ் தெரிவித்தார்.
அவர் தற்போது கொட்டியாகல தோட்ட வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்காக பொலனறுவை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாகவும் பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
முச்சக்கரவண்டி சாரதியான அவர், பொகவந்தலாவை, தெரேஸியா மற்றும் பொகவானை முதலான பகுதிகளில் முச்சக்கரவண்டி பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், அவருடன் தொடர்பை பேணிய அனைவரையும் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் பொகவந்தலாவை பொது சுகாதார பரிசோதகர் கதிர்வேல் ஜெயகணேஷ் தெரிவித்தார்.