மீனை சமையலுக்குப் பயன்படுத்தும் பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

மீனை சமையலுக்குப் பயன்படுத்தும் பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

எந்தவொரு மேற்பரப்பிலும் கொரோனா காணப்படும் என்பதனால் சமைப்பதற்கு மீனைத் தயாரிக்கும் போது அல்லது மீனைச் சேமித்து வைக்கும்போது முகத்தினைக் கைகளால் தொடுவதை தவிர்ப்பதுடன் சமையல் பாத்திரங்கள் மற்றும் கரங்களை நன்கு கழுவிக்கொள்ளுதல் வேண்டும் என்று சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கோட்பாட்டு அடிப்படையில் எந்த ஒரு மேற்பரப்பிலும் கொரோனா காணப்படலாம் என்பதால் சமைப்பதற்கு மீனைத் தயாரிக்கும் போது அல்லது மீனைச் சேமித்து வைக்கும்போது முகத்தினைக் கைகளால் தொடுவதை தவிர்ப்பதுடன் சமையல் பாத்திரங்கள் மற்றும் கரங்களை நன்கு கழுவிக்கொள்ளுதல் வேண்டும்.

அடிப்படையற்ற விதத்தில் மீன் சந்தைகளை மூடுவது அனாவசியமாகும். ஆகையால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினைப் பின்பற்றுதல் மற்றும் கைகளை சவர்க்காரமிட்டு நன்கு கழுவுதல் ஆகியவற்றை இறுக்கமாகப் பின்பற்றி மீன் சந்தைகளை தொடர்ந்து நடத்தலாம் என வலியுறுத்தப்படுகிறது.

அதேபோன்று, நன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞானபூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியால் பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை பி.சி.ஆர் சோதனைகள் மூலம் உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.