நாட்டில் மேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று- சமூகப் பரவலை நோக்கி நாடு (காணொளி)

நாட்டில் மேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று- சமூகப் பரவலை நோக்கி நாடு (காணொளி)

இலங்கையில் மேலும் 201 பேருக்கு இன்று கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

அவர்களில் 37 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்தவர்கள்.

24 பேர் மீன்பிடி துறைமுகங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், 140 பேர் மீன்சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 70 பேர் இன்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

நாட்டில் இதுவரையில் 7 ஆயிரத்து 153 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் தொற்றுறுதியான மூவாயிரத்து 714 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

மூவாயிரத்து 625 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடைய 26 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 6 பேருக்கும், மட்டக்களப்பில் 11 பேருக்கும், கல்முனையில் 9 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

திவுலப்பிட்டி கொரோனா கொத்தணியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அம்பாறை சுகாதார அதிகாரி பிரதேசத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் 5 வைத்தியசாலைகள் கொரோனா நோயாளர்களை பராமரிக்கும் வைத்தியசாலைகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் வடமாகாணத்தில் மேலும் 3 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதி ஆகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுதொடர்பாக உத்தியோகபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை கொரோனா பரவல் காரணமாக, மீன்பிடி துறைமுகங்களுக்கான சுகாதார ஒழுங்குவிதிகளை இன்றைய தினத்திற்குள் உடனடியாக வெளியிடுமாறு, அமைச்சின் செயலாளருக்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சில் இன்று இடம்பெற்ற சந்திப்பில், இந்த ஆலோசனை வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பேருவளை மற்றும் காலி மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த சிலருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகிள்ளது.

இந்தநிலையில், அந்த மீன்பிடி துறைமுகங்களில் 3 இலட்சத்து 50 ஆயிரம் கிலோ மீன்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சின் அதிகாரிகள், சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.

குறித்த மீன்பிடி துறைமுகங்களில் உள்ள மீன்களை விநியோகிப்பதற்காக, சுகாதார ஒழுங்குவிதிகளை வெளியிடுமாறு மீன்பிடித்துறை அமைச்சின் அதிகாரிகள் கோரியதற்கு அமைய, சுகாதார அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இந்தநிலையில் காலி - ரத்கம பிரதேசத்தில் கடற்றொழிலாளர்கள் சிலருக்கு இன்று பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காலி நகர சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இதனை அறிவித்துள்ளது.

காலி மீன்பிடி துறைமுக வளாகத்தில் 400 பேரிடம் பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடைய பலருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ள நிலையில் மக்கள் மீன் உண்பது பாதுகாப்பானதா? என்பது தொடர்பில் இன்று காலை ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உப தலைவர்களில் ஒருவரான ஜீ.சரவணபவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

விழுதுகள் நிகழ்ச்சியின் முழுமையான காணொளி இதோ..!