
மற்றைய நாடுகளை விட முன்னணியில் ஸ்ரீலங்கா! சுகாதார அமைச்சர் பெருமிதம்
கொரோனா கட்டுப்பாட்டைப் பொறுத்தவரை இலங்கை உலகின் பிற நாடுகளை விட முன்னணியில் உள்ளது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதத்தில் கொரோனா தொற்றாளர்களுக்கு சுமார் 150 படுக்கைகள் இருந்தன, ஆனால் இன்று அது 3,000 ஆக உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்தார்.
தற்போது, கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற 30 வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்றாளர்கள் பரிசோதனைக்காக நாள் ஒன்றுக்கு சுமார் 8,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மீன்பிடித் துறைமுகங்களுக்கான சுகாதார வழிமுறைகளை உடனடியாக வெளியிடுமாறு அமைச்சின் செயலாளருக்கு சுகாதார அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
பேலியகொட மீன் சந்தையில் கொரோனா தொற்று பரவியதைத் தொடர்ந்து மீன்பிடித் துறைமுகங்களிலும் வைரஸ் பரவியுள்ள நிலையில் இவ்வாறு சுகாதார வழிமுறைகள் வெளியிடப்படவுள்ளன.
அதேவேளை, பேலியகொட மீன் விற்பனை நிலையத்தில் கடந்த நான்கு நாட்களில் 471 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் அங்கு வைரஸ் இலகுவில் பரவுவதற்குப் பிரதான காரணம் அங்குள்ள குளிரூட்டும் செயற்பாடுகளே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரவலை அடுத்து, காலி மற்றும் பேருவளை மீன்பிடித் துறைமுகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அங்கு தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த சூழலில், நாடு முழுவதும் கொரோனா தடுப்புக்கான சுகாதார வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது மீன்பிடித் துறைமுகங்களுக்கு வழிகாட்டல் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.