கொரோனா காலத்தில் விடுமுறை எடுத்ததால் 385 அரசு டாக்டர்கள் பணி நீக்கம்

கொரோனா காலத்தில் விடுமுறை எடுத்ததால் 385 அரசு டாக்டர்களை கேரள அரசு பணியில் இருந்து நீக்கியுள்ளது.

கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். 1,100 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். போதுமான டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் இன்றி நிலைமை மோசமாகி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அஞ்சி, பல டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பணிக்கு வராமல் விடுப்பு எடுப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, அந்த டாக்டர்கள், செவிலியர்களை கணக்கெடுத்து கேரள அரசு பணியில் இருந்து நீக்கியுள்ளது. இதுதொடர்பாக கேரள சுகாதாரத்துறை மந்திரி சைலஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கொரோனா காலத்தில் ஏராளமான டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் அதிகாரப்பூர்வமற்று விடுப்பு எடுத்திருந்தார்கள். அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை அளித்தும் பணிக்கு வரவில்லை. அதனால், அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். சுகாதாரத்துறை ஆய்வாளர்கள், மருந்தாளுநர்கள், செவிலியர்கள், மருத்து உதவியாளர்கள், ரேடியாகிராபர்கள் உள்ளிட்ட 432 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதில் 385 அரசு டாக்டர்களும் அடங்குவர்” என்று கூறப்பட்டுள்ளது.