புலமைப்பரிசில் வழங்குவதற்கான காசோலை பிரதமரிடம் கையளிப்பு!
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் காசோலை பிரதமர் மஹிந்த ராஜபகஷவிடம் கையளிக்கப்பட்டது.
ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் தலைவர் சிறியான் டி சில்வா விஜயரத்ன அவர்களினால் குறித்த காசோலை அலரி மாளிகையில் வைத்து பிரதமரிடம் வழங்கிவைக்கப்பட்டது.
இரண்டாயிரத்து பத்தொன்பதாம் ஆண்டு 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்காக ரூபாய் 90 மில்லியன் (ரூ.89,895,000) பெறுமதியான காசோலை பிரதமர் மஹிந்த ராஜபகஷவிடம் கையளிக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 5 ஆயிரத்து 993 பிள்ளைகளுக்காக முதல் கட்டமாக புலமைப்பரிசில் வழங்குவதற்காக இந்நிதி மக்கள் வங்கிக்கு வழங்கப்படவுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொழில் அமைச்சராக விளங்கிய 1994ஆம் ஆண்டு தேசத்தின் பிள்ளைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும், ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு செய்யும் உபகாரமாகவும் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அதற்கேற்ப 1994ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டுவரும் வேலைத்திட்டத்திற்கு அமைய ஆண்டுதோறும் 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெறும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய உறுப்பினர்களின் பிள்ளைகள் 9 ஆயிரம் பேருக்கு, தலா 15 ஆயிரம் ரூபாய் வீதம் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்திப்பில் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் தலைவர் சிறியான் டி சில்வா விஜயரத்ன மற்றும் மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ உள்ளிட்ட ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் மற்றும் மக்கள் வங்கியின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

