‘இரண்டாம் குத்து’ போன்ற படங்களில் இனி நடிக்க மாட்டேன் - சாம்ஸ்

இரண்டாம் குத்து’ போன்ற படங்களில் இனி நடிக்கக் கூடாது என முடிவு செய்துள்ளதாக நடிகை சாம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற அடல்ட் காமெடி படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் அடுத்ததாக ‘இரண்டாம் குத்து’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் ஆபாச வசனங்கள், காட்சிகள் அதிகமாக உள்ளதால் ரசிகர்களும், திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் படத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சாம்ஸ் இனி அதுபோன்ற படங்களில் நடிக்கக் கூடாது என முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது: “இதுவரை நான் நடித்த படங்களில் கண்ணியமாகவே நடித்திருக்கிறேன். அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய ஒரு நடிகனாகவே இதுவரை இருக்கிறேன். இந்த மாதிரியான ஜானர் படங்கள் இப்பொழுது சகஜமாகத்தான் வருகிறதே அந்த வயது இளைஞர்களுக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை ஜாலியாக காமெடியா செய்யப்போகிறோம்.

'A' படம் என்று தணிக்கைச் சான்றிதழுடன் வரப் போகிறது இதில் என்ன இருக்கிறது? நடித்தால் என்ன? என்று தான் இந்தப் படத்தில் நடித்தேன். ஆனால், இந்தப் படத்திற்கு இருக்கின்ற எதிர்ப்பை மனதில் கொண்டும் என் கண்ணியத்தைக் காப்பாற்றும் பொருட்டும், இதுபோன்ற படங்களுக்கு ஆதரவு இருக்கிறது என்றாலும் இனி ‘இரண்டாம் குத்து’ போன்ற நேரடி அடல்ட்ஸ் ஒன்லி படங்களில் நடிப்பதைத் தவிர்ப்பது என்று முடிவு எடுத்திருக்கிறேன். முதலில் என்னை மாற்றிக் கொள்கிறேன். தனிமனித ஒழுக்கமே சிறந்தது என்பது என் கருத்து”. இவ்வாறு சாம்ஸ் தெரிவித்துள்ளார்.