விவசாய பொருட்களை கொண்டுசெல்வதற்காக ரயில் சேவை
50 வருடங்களின் பின்னர் மீண்டும் விவசாய உற்பத்திகளை கொண்டு செல்வதற்காக ரயில் சேவையை பயன்படுத்தவுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
விவசாய உற்பத்திகளை சாதாரணமாக கொண்டு செல்லும் போது ஏற்படும் செலவு மற்றும் மாசு என்பனவற்றை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையில், கொழும்பு – திருகோணமலை துறைமுகங்களினூடாக உரத்தை கொண்டு செல்வதற்கும் வடக்கு, தெற்கு மற்றும் மலையக ரயில் சேவைகளினூடாக மரக்கறிகள், பழங்கள் உள்ளிட்ட ஏற்றுமதி பயிர்களை நகர் பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று, மீன் உற்பத்திகளுக்காக குளிரூட்டப்பட்ட வசதியை கொண்ட ரயில் சேவையை பயன்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அரசாங்கத்தினால் உர போக்குவரத்திற்காக வருடமொன்றிற்கு 650 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும் இதற்காக ரயில் சேவையை பயன்படுத்தும் போது செலவை 50 வீதமாக குறைத்துக் கொள்ள முடியுமெனவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.