மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி எப்போது?- சென்னை மாநகராட்சி விளக்கம்

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் அக்டோபர் 31 வரை பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் ஊரடங்கை மீறுவோருக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். ஊரடங்கில் ஏதேனும் அத்துமீறலில் ஈடுபட்டால் ரூ.500-ம், முக கவசம் அணியாவிட்டாலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கா விட்டாலும் ரூ.200-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் அதையும் மீறி விடுமுறை தினங்களில் கடற்கரைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு தடையை மீறி வருவோருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.200 அபராதம் விதிக்கின்றனர்.

இதற்கிடையே மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்த மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரி மீனவர் நலன் அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிப்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், ஆலோசனைகளையும் வழங்கினர்.

மேலும், கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு துறைகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து அரசும், சென்னை மாநகராட்சியும் என்ன முடிவு எடுத்துள்ளது என்பதை அக்டோபர் 5ம் தேதி தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், புதிய கடைகளை வைக்க உரிமம் வழங்குவது குறித்த டெண்டர் பணிகள் எந்த அளவில் இருக்கிறது என்பதையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் அக்.31 வரை பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்றும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அனுமதி இல்லை எனவும் சென்னை மாநகராட்சி உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

மெரினாவில் தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் நவம்பர் 9 ந்தேதி திறக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, டெண்டர் திறப்பு குறித்து நவம்பர் 11க்குள் பதிலளிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.