இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் மன்னாரில் கைது

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் மன்னாரில் கைது

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாரிற்கு இரண்டு பேர் வந்த நிலையில் அவர்களை அழைத்து வந்த மற்றும் உதவினார்கள் என்ற சந்தேகத்தில் 6 பேர்கள் புலனாய்வுத்துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாரிற்கு வந்த இரண்டு பேர் மடு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில் குறித்த இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவர் எவ்வாறு மன்னாரிற்குள் வந்தார்கள் என அரச புலனாய்வுத்துறையினர் விசாரனைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் படகு மூலம் அவர்களை இலங்கைக்கு அழைத்து வர உதவிகளை மேற்கொண்டவர்கள் என்ற அடிப்படையில் பேசாலை மற்றும் வங்காலை பகுதிகளைச் சேர்ந்த 6 பேரை இராணுவத்தின் உதவியுடன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(5) புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதன் போது குறித்த இருவரையும் அழைத்து வர பயன் படுத்தப்பட்ட படகு மற்றும் படகுகின் வெளி இணைப்பு இயந்திரம் போன்றவற்றை பொலிஸார் துள்ளுக்குடியிருப்பு கடற்கரையில் இருந்து மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.