கட்டப்பட்டு வரும் அயோத்தி விமான நிலையத்துக்கு ராமர் பெயர் சூட்ட முடிவு

அயோத்தியில் கட்டப்பட்டுவரும் விமான நிலையத்துக்கு ‘மரியாதா புருஷோத்தம் ஸ்ரீராம் விமான நிலையம்’ என்று பெயர் சூட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலும், மசூதியும் கட்டப்பட்டு வரும் நிலையில், அங்கு அதிகரிக்கப்போகும் பக்தர்கள் வரத்தை கருத்தில்கொண்டு விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அதை பின்னர் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், உத்தரபிரதேச சட்டசபையில் 2021-22-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி மந்திரி சுரேஷ் கன்னா நேற்று தாக்கல் செய்தார்.

அதில், அயோத்தியில் கட்டப்பட்டுவரும் விமான நிலையத்துக்கு ரூ.101 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், அதற்கு ‘மரியாதா புருஷோத்தம் ஸ்ரீராம் விமான நிலையம்’ என்று பெயர் சூட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.