
யாழ்ப்பாண மக்களுக்கு மற்றுமொரு தொற்று நோய் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள வைத்தியர்!
யாழில் எலிக்காய்ச்சல் தொற்று அரிதாக இருந்தாலும் எலிகளை கட்டுப்படுத்துவதன் மூலமே நோய் பரவலை தடுக்கலாம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி .யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய்த் தொற்று தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இலங்கையில் எலிக்காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன. லெப்ரொஸ் வைரஸ் என்பது பொதுவாக எலிக் காய்ச்சல் என அழைக்கப்படும். இது இலங்கையில் அடுத்தடுத்து 1960 ,1970களில் இனங்காணப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. அதன் பின்னர் வெகுநாட்களாக இந்நோய்த் தாக்கம் குறைவடைந்திருந்தது.
குறிப்பாக இந்நோயானது வயலில் வேலை செய்பவர்களுக்கு ஏற்படுகின்றது. இந்நோய்க் கிருமி எலிகளிலிருந்தும் அவற்றின் சிறுநீர் வயல் நீருக்குள் செல்லும் போதும் விவசாயிகளின் உடலில் ஏதாவது சிறு காயங்கள் இருப்பின் அதனூடாக நோய்க்கிருமி தொற்றலாம்.
அடுத்ததாக இந்த சிறுநீர் கலந்த நீரில் முகத்தை கழுவும் போதோ அல்லது குளிக்கும் போதோ இந்த நோய் கிருமி தொற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது.
இந்நோய் பொதுவாக இலங்கையில் களுத்துறை ,இரத்தினபுரி ,புத்தளம், சிலாபம் அனுராதபுரம் போன்ற மாவட்டங்களில் அதிகளவில் காணப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் குறைவாக இருந்தது யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது ஓரளவு இனம் காணப்பட்டு வருகின்றது. இவ்வருடம் ஒருவர் இந்த வைரஸ் நோயால் இறந்துள்ளார் சுமார் 30 பேருக்கு சந்தேகத்துக்குரிய இந்த கிருமி இனங்காணப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது.
இலங்கையிலும் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. லெப்ரோஸ் வைரஸ் நோயினை இனங்காண்பதற்கு நோயாளிகளுக்கு காய்ச்சல் இருக்கும், தசை நோய் இருக்கும், கண் சிவப்பாக இருக்கும் இவர்களுக்கு சிறுநீரகம் செயலிழக்கலாம் மூளை செயலிழக்கலாம் இதயம் செயலிழக்கலாம், சிறுநீரகத்தின் செயற்பாடு குறைவடைந்து செல்லும்.
லெப்ரொஸ் வைரஸ் தொற்றை ஆரம்பத்தில் இனங்கண்டால் சிகிச்சை அளிப்பதன் மூலம் பூரணமாக குணப்படுத்த முடியும் இனங்காணப்படாவிட்டால் இறப்பு ஏற்படும்.
இந் நோய் தொற்றுக்குரிய MRI பரிசோதனை கொழும்பில் தான் உள்ளது இந்த பரிசோதணைக்கு எடுக்கும் காலம் இரண்டு கிழமைகளாகும்.
ஆரம்பத்திலேயே இந் நோய்தொற்றினை கண்டுபிடித்து சிகிச்சையளிப்பதன் மூலம் இதனை குணப்படுத்தலாம் இதனை இனங்கண்டு தடுப்பதற்கு முயற்சிக்கவேண்டும். எலிகளின் பரம்பல் இந்த நோய்க்கு ஒரு காரணமாக இருக்கிறது அதேபோல் யாழ்ப்பாண குடாநாட்டை பொறுத்தவரைக்கும் எலிகளின் பெருக்கம் இந்நோய் பரவுவதற்கு ஒரு காரணமாக அமையும்.
குறிப்பாக யாழ்ப்பாண குடாநாட்டை பொறுத்தவரை எலிகளின் பெருக்கத்திற்கு நகரமயமாக்கப்படும் போது வீடுகள் நெருக்கமாக கட்டப்படும் போது அங்கு உணவு பொருட்களை தீண்டுவதற்காக எலிகள் வருகின்றன அதேபோல் பாம்புகளின் அளவு குறையும் போதும் எலிகளின் பெருக்கம் கூடும் இதனை குறிப்பாக யாழ்ப்பாண மக்கள் அவதானிக்கவேண்டும்.
அடுத்ததாக இந்த எலிகள் உணவுப் பண்டங்களை தீண்டுவதால் நோய்க் கிருமி தொற்றலாம் உணவு பண்டங்களில் சிறுநீர் கழிப்பதால், வீடுகளில் உள்ள நீர்த் தாங்கிகளில் எலிகள் இறங்கலாம் ,அல்லது சிறுநீர் கழிக்கலாம் இவ்வாறும் இந்த நோய் வரலாம் எனவே யாழ்ப்பாணத்தில் மிகவும் அரிதாக இருந்தாலும் எலிகளை கட்டுப்படுத்துவதால் இந்த நோய் பரவலை தடுக்கலாம்.
அடுத்ததாக இந்நோய் எருமை மாடு நாய் போன்றவற்றிலும் இருந்தும் தொற்று ஏற்படலாம். குறிப்பாக மிருகங்களை வளர்ப்பதற்காக ஒரு பிரதேசத்தில் இருந்து இன்னொரு பிரதேசத்திற்கு கொண்டு வரும்போதும் வளர்ப்பு பிராணிகள் மூலமும் இந்த நோய் தொற்று வரக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுகின்றது.
அடுத்ததாக நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகளிலிருந்து உணவு பொருட்களை களஞ்சியமாக வாகனங்களில் கொண்டு வரும்போதும் அங்கிருந்து இந்த நோய்க் கிருமிகள் தொற்றும் வாய்ப்புள்ளது.
எனவே இது தொடர்பில் விழிப்புணர்வு நமக்குத் தேவை ஏனெனில் டெங்கு நோய் A-9பாதை மூடப்பட்ட போது யாழ்ப்பாணத்தில் இல்லை ஓரிரு நோயாளிகள் இனங்காணப்பட்டார்கள் பாதை திறந்த பின்னரே டெங்கு நோய் வந்தது அதேபோல லெப்ரோஸ் வைரஸ் யாழ்ப்பாணத்தில் பெருகாமல் தடுப்பது மிக முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வயல்களில் வேலை செய்பவர்களுக்கு இந்த நோய் வராமலிருக்க எலிகளின் கட்டுப்பாடு மிக முக்கியமானது அடுத்ததாக இலங்கையில் 2004 ஆம் ஆண்டு லெப்ரோஸ் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிளவில் இனங்காணப்பட்டார்கள்.
சுமார் 2000 பேர் இனம் காணப்பட்டார்கள் ஒரு லட்சம் பேர் வரை பாதிப்படைந்தார்கள் 300 பேர் வரை இறந்தார்கள் அவர்களுக்கு கிருமி தொற்று ஏற்பட காரணம் வெள்ளப்பெருக்கு அதாவது வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது நோய்க் கிருமி உள்ள நீரானது எல்லா இடத்துக்கும் போகும்போது அந்த நீரை நாங்கள் அருந்தும் போது அந்த நோய்க்கிருமி இலகுவாக தொற்றக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.
எனவே யாழ்ப்பாண மாவட்ட மக்கள் எலிக்காய்ச்சல் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.