
பேருந்து கட்டணம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சரின் கருத்து....!
சாதாரண பேருந்துகளில் அரை சொகுசு பேருந்துகளுக்கான கட்டணத்தை அறிவிடுவதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதி வழங்கப்படமாட்டது என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
சாதாரண பேருந்துகளுக்கான கட்டணத்தை அதிகரித்துக்கும் பேருந்து சங்கங்கள் விடுத்த கோரிக்கை தொடர்பில் எமது செய்தி பிரிவு வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
சாதாரண கட்டண அறவீட்டுடன் முன்னெடுக்கப்படும் பேருந்து சேவைகளுக்கும், அரை சொகுசு பேருந்துகளில் அறவிடப்படும் பயணக் கட்டணத்தை அறவிடுவதற்கு வாய்ப்பு வழங்குமாறு போக்குவரத்து தரப்பினர் அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்திருந்தனர்.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன மற்றும் அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன ப்ரியஞ்சித் ஆகியோர் இந்த யோசனையை முன்வைத்துள்ளனர்.
நாடுமுழுவதும், சாதாரண கட்டண அறவீட்டுடன் இயங்கும் பேருந்துகள், ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு முன்னர் பெற்ற வருமானத்தில் 50 வீத வறுமானம் குறைவடைந்துள்ளதாக போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனவே, ஆசன எண்ணிக்கைக்கு அமைய, பயணிகளை ஏற்றிச் செல்லும் அரை சொகுசு பேருந்துகளில் அறவிடப்படும் கட்டணத்தை, சாதாரண கட்டணத்தை அறிவிடும் பேருந்துகளுக்கு அறவிடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அண்மையில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த பிரச்சினை தொடர்பில் அறிவிக்கவில்லை எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவிதத்திலும் இடமளிக்க முடியாதெனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்வதால் நட்டம் ஏற்படாது.
பேருந்து சங்கங்களுக்கு இவ்வாறான பிரச்சினைகள் காணப்படின் அதனை ஈடுசெய்வதற்கு வேறு வழிகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.